Thursday, July 14, 2016

கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் ...

அண்மையில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பெட்னா (fetna )வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதை (July 2,2016)

கானகத்தில் மனிதன் 
கால் சுவடகள் பதிக்க  
கடித் தமிழகமோ 
அரிச்சுவடி தொடங்கியிருந்தது

பூந்தமிழ் கூறும்  
பண்பும் , இலக்கியமும் 
நம்  சமூகத்தின் 
வாழ்வியலை உலகிற்கு 
உணர்த்தும் முழக்கு  

தமிழின் தொன்மை 
அறிவோம் 
தமிழின் இனிமை 
தெரிவோம் 

தமிழ் எனின் அமிழ்தாம் 
என்பர் கவி வரைவோர் 
அமிழ்தினை சுவைத்தார் 
அவணியில் உண்டோ ?
கவின் கூட்டும் உவமை தான் 
கவியில், கற்பனை மெருகூட்டும் 
 மறுத்தேன் இல்லை 
கற்பனையும் 
ஐம்புலனுக்கு ஐயமின்றி 
இருத்தலே நலம் அன்றோ?

 
மறைக்கதவு திறந்திட 
செய்திட்ட தமிழே, மொழியே, அமுதே 
என்று பாடிடுவார் 
மனம் மகிழ்ந்திடுவார் 
பக்தி மணம் பரப்பிடுவார் 
கோயிலில் 
நீச மொழி என்றே 
ஒரு காத தூரம் ஓடிடுவார் ...

எண்புகள் கொண்டு உயிரை 
மீட்டெடுத்த கதை இனிக்கும் 
வரலாறோ எண்பும் சதையும் 
சிதையும் குண்டு மழையில் 
மொழி தமிழ் ஆனதால் 
எனும் உண்மை மறுக்கும்  

மெய்யாய் அவனியில் 
தழைத்தோங்கும் 
தமிழின் தலைமை 
வரலாறறியும்
சிங்கப்பூரில் தமிழ் 
ஆட்சி மொழியாம் 
நமக்கோ 'தமிழ்'நாடு 
என்ற பெயரே மிச்சம் !!

தமிழ்ப் பிள்ளைகளின் 
பெயர்கள் ஒலிக்க 
கேட்டால் 
பெயரில் 'தமிழ் 'இல்லை 
மதங்கள் மட்டுமே !!

தமிழ் கற்றிட 
பிழையின்றி எழுதிட 
தமிழனுக்குத் 
திராணியில்லை 
இந்தி படிக்காது 
ஒரு தலைமுறையே பாழ் 
என்ற  உளறலுக்கு பஞ்சமில்லை 

செத்த மொழியில் விஞ்ஞானம் 
எனப்  பூரிப்போர் 
 தாய் மொழி கற்றலே 
சமூகஉயிர்ப்பின் விஞ்ஞானம் 
என அறியாத மங்குனிகள் !!

உணவைத் திணித்தால் 
துப்புவது உயிர்க்காக்கும் 
மொழியும் அவ்வாறே 
மரித்த மொழியெல்லாம்
அரியணை 
ஏறிடத் துடித்திட்டால் 
சவுக்கடி கொடுப்பது ஒன்றே 
சரியாமாம் !!

நுனிநாக்கு ஆங்கிலம் அந்தக் காலம் 
தமிழும் நுனிநாக்கில் 
அல்லல்படுது இந்தக் காலம் 
கசடதபற 
ஙஞணநமன 
யரலவழள  
எல்லாமே தகதிமி தகதிமி தான் 
தொலைக்காட்சியில் ஒற்றுப்பிழையையும் 
திரைப்பாடல்களில் உச்சரிப்பு கொலையையும் 
but -ஆனா இம்சைகளையும் 
தட்டிக் கேட்பாரில்லை 
செவ்வியல் மொழிதனை 
சவக்குழிக்குள் புதைக்கவே 
இங்கே அட்டியில்லை 

மொழியின் அழிவு 
அம்மக்களின் அழிவன்றோ?
அம்மொழி இயம்பும் 
பண்பாட்டின் அழிவன்றோ?

சீர்மிகு வாழ்வு வாழ்ந்தோம் 
சீறிவந்த பகை முடித்தோம் 
என மிடுக்காய் நுவல்கின்றோம் 
தமிழினம் கெடுத்த 
பங்காளிச் சண்டையினை; 
பின் சேரனும் , சோழனும் , பாண்டியனும் 
பகையாமோ?

ஆயிரம் உட்பகை கொண்டு 
சமயம் கொண்டு 
ஜாதி கொண்டு 
உயிர்ப்பலிக் கொன்றோம் 

 செம்புலப் பெயல் நீர் போல,
 அன்புடை நெஞ்சம்  தாம் கலந்தனவே!
 என்ற குறுந்தொகையின் காதல் அன்று ;
இன்றோ காதல்  
 ஒடுக்கப்பட்டோன் தலைவாங்கும் ;
 திவ்யாக்களும் , கவுசல்யாக்களும்  
 பிறப்பொக்கும் எனும் மடிந்த  தத்துவத்தின் 
 மெய்யாய் நின்றிடும் சாட்சிகள் !!
 பெருமாள் முருகன்களும், 
 துரை குணாக்களும் 
 சாதீயில் 
 சிதைந்து போன எழுத்தாற்றலின் 
 மானுதல்  !!

கெடல் எங்கே தமிழின்  நலம் 
அங்கெல்லாம் 
தமிழினத்தின் நலமும் கெடல் 
ஜாதியும் 
சமயமும் 
பிறமொழி நாட்டமும் 
கடிகையாய் 
சுழலும் வரை 
சமத்துவம் ஏது ?
சகோதரத்துவம் ஏது?
தமிழின் மேன்மை'ஏது?


கெடல் எங்கே தமிழின் நலம் 
அங்கெல்லாம் புறப்பட்டு 
இளஞ்சிங்கங்காள் ;
 வஞ்சனை விரட்டு ,
தமிழர் பகைதனை முடித்து ;
 உயர்நீதிகள்  உண்டு தமிழில் 
 உயர் நீதிமன்றத்தில் தான் 
 தமிழே இல்லை 
தட்டிக் கொண்டே இருந்தால் 
கதவுகள் திறக்காது 
தகர்த்துப் போடு!!
தமிழை அரியணை ஏற்று ;

கெடலின் காரணிகளை 
களம் கண்டு களை பிடுங்க 
தழைக்கும் தமிழின் நலம் 
சிறக்கும் தமிழர் வாழ்வு 
தாமதித்தால் 
சாம்பலாகக் கூட 
எஞ்சாது தமிழும் - தமிழினமும் !!

Saturday, March 19, 2016

இந்தியாவில் திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு (Marital Rape ) -ஒரு பார்வை

http://siragu.com/?p=20108


அண்மையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மேனகா காந்தி அவர்கள் இந்தியாவைப் பொருத்தவரை திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு(Marital Rape) சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்பட மாட்டாது என்று அறிவித்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது புனிதமாகப் பார்க்கப்படுவதாலும், மதங்களும், சமூகக் கட்டமைப்பும் பெண்கள் என்பவர்கள் ஆணின் உடைமை என்பதை அங்கீகரிக்கும் காரணத்தினாலும் இந்த நாட்டில் திருமண உறவில் பெண் வல்லுறவு செய்யப்பட்டால் அது தவறு இல்லை என்று சட்டம் சொல்கின்றது.  இது மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். இந்தியாவில் திருமணத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, தெரியாத பிற ஆண்களிடம் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களை விட 40 மடங்கு அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தரும் தகவல் என்று  2014-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 -The Criminal Law (Amendment )Act 2013- இல் “15 வயதிற்கு உட்பட்டவராக மனைவி இல்லாத பட்சத்தில் கணவன் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தால் அது குற்றம் இல்லை.” என்று கூறுகின்றது.
thirumanaththil4திருமணத்திற்குப் பின் பெண் என்பவள் தனக்கான இச்சையைக் கூட தீர்மானிக்க அருகதை அற்றவள் என்பதைத்தான் இந்தியச் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதற்கு மதங்களும் சமூகக் கட்டமைப்பும், திருமணம் என்பது புனிதம் என்று வைத்திருக்கும் கற்பிதமே காரணம். குடும்பங்கள் என்ற அமைப்பு சிதறிவிடக் கூடும் என்று 21-ஆம்  நூற்றாண்டிலும் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு குற்றமாகாது என்று கூறுவது மிகப் பெரிய தவறு.
இந்திய தண்டனைச் சட்டம் 375-இன் படி மனைவிக்கு 15 வயதிற்கு கீழ் இருக்கும் நிலையில் பாலியல் வன்புணர்வு குற்றம் என்றும், 15 வயதிற்கு மேல் இருப்பின் குற்றமாகாது என்றே கூறுகின்றது. குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாகவும்,  பெரும் காயம் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் மட்டும் குற்றமாகும் என்று கூறுகின்றது. மேற்கண்ட அனைத்தும் உரிமையியல் தீர்வுகள் மட்டுமே (civil remedies) சட்டப்படியான குற்றச் செயல் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தை மணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்ணிற்கு திருமண வயது 18. ஆனால் திருமண உறவில் மட்டும்  15 வயதிற்கு மேற்பட்ட பெண் தன் விருப்பம் இல்லை என்றாலும் கணவன் என்ற ஆண் அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்யலாம் என்பது  மிகப் பெரிய முரண்.
thirumanaththil32012 -இல் தில்லி நீதிமன்றம் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கணவனை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்படியான மனைவியாக இருந்தால், மனைவிக்கு உடன்பாடு இல்லாத நிலையில் அல்லது கட்டாயத்தின் பெயரில் உடலுறவு இருந்தாலும் பாலியல் வன்புணர்வு ஆகாது என்று தீர்ப்பளித்தது.
இந்தியாவில் ஏன் இந்த மன நிலை இருக்கின்றது? என்பதற்கு மன நல அலோசகர் திரு. தீபக் கஷ்யப், இந்தியாவில் உடலுறவு என்பது பெண்ணின் கடமையாகப் பார்க்கப்படுகின்றது. இங்கே பாலியல் தேவைக்கும் – இன்பத்திற்கும் வேறுபாடு அறியாத மக்கள் இருப்பது வேதனை என்று தெரிவித்தார்.
Women’s Media Center என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மே மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் (May article) 27 வயது நிரம்பிய பெண்ணின் வலி மிகுந்த வரிகள் இவை,
“எங்கள் படுக்கை அறையில் நான் ஒரு பொம்மையைப் போன்று, அடிமை போன்றே நடத்தப்பட்டேன். மாத விடாய் காலங்களில் கூட எனக்கு ஓய்வு இல்லை. என் கணவனின் பிறந்த நாள் அன்று கட்டாய உடலுறவில் என் பிறப்புறுப்பில் செலுத்தப்பட்ட மின்கல விளக்கால் 60 நாட்கள் எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டது”  என்று கூறியிருந்தார்.
உச்சநீதிமன்றத்திடம் அந்தப் பெண் திருமணத்தில் பாலியல் வன்புணர்வை குற்றச்செயல் என்று அறிவிக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றம், ஓர் நபருக்காக சட்டம் மாற்றப்பட மாட்டது என்று மனசாட்சி இன்றி ஆணாதிக்க சமூகத்தின் பிம்பமாய் அந்த மனுவை நிராகரித்தது.
law book and gavelஇந்தக் கொடுமையைச் செய்த கணவனுக்கு எந்த வித தண்டனையும் இந்திய நீதி மன்றங்கள் வழங்கவில்லை என்பதே வேதனை. இப்படி இந்தியா முழுவதும் தினமும் பல பெண்கள் அவதிப்படுகின்றனர்.
டெல்லி பாலியல் வன்புணர்வு நிகழ்வுக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா குழு, திருமண வல்லுறவை குற்றமாக அறிவிக்கும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளச் சொல்லி 2013-இல் பரிந்துரை செய்த போதும் இன்றும் அச்சட்டம் எட்டாக் கனியாகவே உள்ளது. 2012-இல்  கர்நாடகாவில் உள்ள உயர் நீதிமன்றம், மனைவி எந்தவித காரணமும் இன்றி கணவனிடம் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை எனின் அது கொடுமை என்று தீர்ப்பளித்தது. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றமும் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இங்கே சட்டப்படி மனைவி என்ற பெண் கணவனின் பாலியல் அடிமை என்றே சட்டம் நிறுவியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. திருமணம் புனிதம் நிறைந்தது அதில் பெண் வன்புணர்வு செய்யப்படலாம் என்பது அறிவு வளர்ச்சி பெற்ற சமூகத்தின் வெளிப்பாடாக இருக்க முடியாது.
உலக அளவில்  போலந்து (1932), செகச்லோவாக்கியா (1950), சோவியத் யூனியன் (1960), ஸ்வீடன் (1965), நார்வே (1971), அமெரிக்காவில் 18 மாநிலங்கள், 3 ஆஸ்திரேலியா மாநிலங்கள், நியூ சிலாந்து, கனடா, இஸ்ரேல், பிரான்ஸ் என்று பல நாடுகள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே  திருமண பாலியல் வன்புணர்வை சட்டப்படி குற்றம் என்று அறிவித்து விட்டது.
நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டம் சரத் 21 -இன் படி எந்த ஒரு மனிதரின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுதல் கூடாது. பெண் – அவளின் உடல் மீதான ஆதிக்கம் என்பது அடிப்படை இந்திய அரசமைப்புச் சட்டம் தரும் வாழ்வுரிமைக்கு எதிரானது. அந்த வகையில் எந்த மதமும், சமூகக் கட்டமைப்பும் அந்த அடிப்படை உரிமையை ஒரு பெண்ணிடம் இருந்து திருமணம் – கணவன் என்ற பெயரில் எடுத்துக் கொள்வது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை கருத்தில் கொண்டு இனியேனும் திருமணத்தில் பாலியல் வன்புணர்வு சட்டப்படி குற்றம் என்று சட்டம் இயற்ற வேண்டும்.

Saturday, March 5, 2016

புதிய முகம்

https://issuu.com/puthiyamugam.com/docs/magazine_march_1_test



புதிய முகத்தில் வெளிவந்த பெண்ணியம் குறித்த கட்டுரை . பக்கம் எண் 39-41

எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை)


http://siragu.com/?p=19888

கடிகார மணி அடிக்கும் முன்
விறு விறு என்று எழுந்தேன்
கண்கள் கசக்கிய படி
மணியை பார்த்தேன்
ஆறடிக்க இன்னும் 15
நிமிடங்கள்
மனம் துயில் கொள்ளவே
விரும்பினாலும்
கால்கள் அடுக்களையை
நோக்கியே நடந்தன
சென்ற மாதம் படிக்க
ஆரம்பித்த நாவலை
எப்படியும் இந்த வாரமாவது
படித்து முடித்து விட வேண்டும்
என்று எண்ணிக் கொண்டே
அரிசியை கொதிக்கின்றே
உலையில் இட்டேன்
நேற்று தோன்றிய கவிதையை
எப்படியும் இன்று எழுதிட வேண்டும்
என்று நினைக்கையில்
மக்கள் இருவரையும் எழுப்பிட
வேண்டும் என்ற எண்ணம்
வந்தவளாய் இருவரையும்
எழும்பிட குரல் கொடுத்தேன்
கட கட என்று
காய் நறுக்கி
குழம்பு பொரியல்
காலை சிற்றுண்டி
தயாரித்து
ஆவி பறக்க தேநீர்
தயார் செய்து
செய்தித்தாளில்
மூழ்கிக்கிடக்கும்
கணவனுக்கு
தந்து விட்டு
தேநீர் பருகலாம் என்று
வாய் வரை கொண்டு
செல்லும் போது தான்
கவனித்தேன் மணி ஏழு;
இன்னும் ஒரு மணி
நேரத்தில் ஓட வேண்டும்
தேநீர் பிறகு அருந்தலாம்
என்று மேசையில்
வைத்து விட்டு
பிள்ளைகளை தயார் செய்து
சீருடை காலணிகள்  மாட்டி விட்டு
நிமிர்கையில்
மணி எட்டை நெருங்கிக்கொண்டிருக்க
தட தட வென நானும்
தயாராகி
தொடர் வண்டியை பிடித்து
கூட்டத்தில் நசுங்கி
அலுவலகம் செல்லும்
நேரம் மணி சரியாக பத்து ;
செக்கு மாடு வேலை என்றாலும்
மூளை சூடாகும் ;
மீண்டும் மாலை வீடு திரும்பும்
வேளை  நாளை
சமைக்க காய்கறி
வாங்கிக் கொண்டு
ஓட்டமும் நடையுமாய்
வீடு வந்து சேர்ந்தேன்
பிள்ளைகளை
ஒழுங்கு படுத்தி
படிக்க வைத்து
வீட்டினை சீர்ப்படுத்தி
இடைப்பட்ட நேரத்தில்
உணவு தயாரித்து
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் பரிமாறி
உண்ட பாத்திரங்களை
கழுவி
காய்கறிகளை வெட்டி
குளிர்ப்பெட்டியில் வைத்து விட்டு
வரும் போது தான் பார்த்தேன்
காலையில் மேசையில் வைத்த
தேநீர் ஆறியிருந்தது !!
பிள்ளைகள் தூங்கி விட்டனர்
நாவலை இரண்டு பக்கம்
புரட்டினேன் உடற்சோர்வும்
காலை எழ வேண்டுமே
என்ற எண்ணமும்
கண்களை மூட வைத்தது
மணி பதினொன்று !!
நினைத்துக்  கொண்டே இருக்கின்றேன்
உறக்கத்திலும்…;
சென்ற மாதம் படிக்க
ஆரம்பித்த நாவலை
எப்படியும் இந்த வாரமாவது
படித்து முடித்து விட வேண்டும்
நேற்று தோன்றிய கவிதையை
எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!

Saturday, February 13, 2016

http://siragu.com/?p=19759

மெய்யாய் பொய்யாய்
மேதினியில் மனிதர் வாழ்வு
ஓடிக் கொண்டிருக்கும் …
மெய்யை உழைப்பாய்
ஒரு உயிர் தந்து கொண்டிருக்கும்…
இருட்டின் விளிம்பில்
இருண்டு போகும் வாழ்க்கை …
எனினும் மருட்சியில் மாளாது
துணிந்து தூய மனம் போராடும்;
தன்னை சதையாய் எண்ணிச்
சிதைத்து உண்டவனெல்லாம்
தரணியில் தயக்கமின்றி
மெய்யனாய் உலவுகின்றான்
பசிக்கு உடல்தனை புசிக்க
தந்தவள் நாய் தீண்டா
தரித்திர பிண்டமாம் !!
பசி எனச் சொன்னவளின்
உணவுக்கு வழி சொல்லாது
படுக்கைக்கு வழி காட்டிய
கயவனெல்லாம்
யோக்கிய கனவான்களாம்
பெண்ணை காமத்துக்காய்
கடித்து துப்பியவனெல்லாம்
மானம் போயின் உயிர் துற
என்றே பெண்ணுக்கு  இலக்கணம்
செப்பிடும் முரணே இங்கு விந்தை !!
வழி தெரியா வேளை
பசி, பிணி, கண்டும்
உதவாச் சமூகத்தின்
காமத்தின் தேடலுக்கு
வடிகாலாய் வாழ்ந்து
உயிர் நொந்து
உடல் தேயும்
பெண்
அவள்
அவிசாரி
விபச்சாரி
எனின்
காம வெறி கொண்டு
அலையும்
ஆண் அவன்
யார் என்றே
ஆண்டாண்டுகளாய்
உரக்க கேட்கின்றோம்
பதில் மட்டும்
இல்லை …!!??