Sunday, August 17, 2008

நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

தேவையற்ற பண்டிகைச்
செலவு குறைத்திட்டே
சேமிப்பு கொண்டே
வாழ்வில் மகிழ்ச்சி மிளிர்ந்திட!!
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

ஆயிரக் கணக்கில்
ஆயுதம் ஏந்திய
கடவுள் எண்ணிக்கையில்;
எதையாவது வழிபட
விட்டுத் தொலைத்தால்
நேர்ந்திடுமே அவலம்
என்றே எண்ணி எண்ணியே
பொருளினையும் நேரத்தினையும்
வீணாக்கிடும் இவற்றை
விட்டோழித்து ஆக்கப் பணியில்
புத்தியினைச் செலுத்தியே
வாழ்வில் வளம் பெறலாம்,
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

என் கடவுள் சிறந்தது
உன் கடவுள் சிறியது
எனவே போரிடும்
மக்களே கூட
ஒரு நிலையினில் நாத்திகர்தான்!!
நீ கடவுள் இல்லை
எனச் செப்பியே
மனிதம் வளர்த்திட
பாடுபட்டே மனிதநேயம்
காத்திட நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

அறிவிற்கு பொருந்தா
கடவுளர் பிறப்பும்
அவற்றின் ஒழுக்கமற்ற நடப்பும்
உன் மூளைதனில் ஏற்றியே
உனை மூலையில்
அமர்ந்திடச் செய்வர்!! அதனை
தகர்த்தே பகுத்தறிவினை ஏற்றே
பண்டைத் தமிழ்
மறவரின் வாழ்வினை
அறிந்தே செயல்பட
பண்பாட்டு
படையெடுப்பினைப் புரிந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

வாழ்வில் தோற்பின்
விதி எனவே மூலையில்
முடங்கிடாது தோற்ற
காரணம் அறிந்தே
விதி தனை
மதி கொண்டு
வென்றிட
வாழ்வின் போராட்டம் புரிந்திட
தன்னம்பிக்கையின் தத்துவத்தினில்
நம்பிக்கை வந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

எல்லாம் அவன் செயல் என்றே
மக்கள் தொகை பெருக்கிட்டார்;
குடும்ப கட்டுப்பாடே
நாட்டினை வளமாக்கிடும்
என அறிந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

இயற்கை சீற்றத்திலும்
தீவிரவாதத்திலும் சிக்குண்டு
மனிதன் அழிவுறும் நொடியில்
வாரா இறைவன்
வருவான் வருவான்
என்றே எதிர்பார்த்தே
அவன் விமானம் கொண்டே
வருவான் சொர்க்கம் சென்றிட
என்றே பூசைகளும் பலிகளும்
நடத்தியே வாழும் காலம்
அறிவு தொலைத்து
மனிதம் மறந்து
இறந்தபின் மோட்சம்
செல்ல வேண்டி வேண்டி
இறப்பதை விட
மண்ணில் வாழ்ந்திடும் நேரம்
மண்ணின் உயிர்களை
நேசித்தே வாழ்ந்திடவும்
இறந்தால் உடல்
மண்ணோடு மண்ணாக
மக்கிப்போகும்
உயிரோ தனியே
எங்கும் உலவிடாது என்றே
உண்ர்ந்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

சுகவாழ்வு வாழ்ந்திட
சுயமரியாதை பெற்றிட
தன்னலம் மறந்திட
மனிதம் தழைத்திட
நாத்திகத்தை ஏற்றுப்பார்!!

தீ பரவட்டும்

புரட்சி தீ பரவட்டும்
புரட்டர்களை புரட்டிடவே
புரட்சி தீ பரவட்டும்
ஊழல் பெருச்சாளிகளை
அடித்து கருக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புல்லர்களை புண்ணாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பெண்ணடிமை போற்றிடும்
கனவான்களை தீயால் உமிழட்டும்
புரட்சி தீ பரவட்டும்
மதம் பிடித்து அலையும்
மனிதர்களை மண்ணில் புதைக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொய்யர்களை பொடியாக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்-பூமியில்
புன்னகை மறக்கடிக்கும்
தீவிர மாக்களை அழிக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
பொல்லா வாழ்வு வாழ்ந்திடும்
பொறுப்பில்லா கள்ளர்களை நொறுக்கட்டும்
புரட்சி தீ பரவட்டும்
புண்ணிய பூமி இது என்று
புளுகியே பிணக் காடாய்
மாற்றும் எத்தர்கள் எரிக்கப்படட்டும்
புரட்சி தீ பரவட்டும்
அறியாமை அகன்றிட
அமைதி நிலவிட
பகுத்தறிவு வளர்ந்திட
புரட்சி தீ பரவட்டும்
விண்ணையும் தொட்டு
பரவட்டும்
பாரில் சமத்துவம்
நிலைத்திட பரவட்டும்
புரட்சி தீ பரவட்டும்!!

சில ஆசைகள்

ஒயிலாட்டம்,தப்பாட்டம்,கரகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அண்மைக்காலத்தில் எனை வாட்டுகின்றது

அது போன்றே , சிலம்பாட்டமும் கற்றுக்கொள்ள அவா!!

இதனை கற்றுக்கொள்ளும் இடங்கள் பற்றியே தகவல்கள் தெரிந்தால் தயவுகூர்ந்து உதவவும்!

தோழனே

ில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.

நண்பர்கள் தினம். என்றுமே மறக்க முடியா ஒரு விழா. நண்பர்கள் இருக்கும் எவர் வாழ்வும் வீண் இல்லை. அதுவும் குறிப்பாக கல்லூரியில் பயிலும் அந்த நான்கு வருடங்களும் வாழ்நாளில் என்றுமே மனதில் வைத்து ரசிக்கப்படவேண்டிய தருணங்கள். நண்பர்களின் மகிழ்ச்சி சிரிப்பில் கிண்டல் கேலிகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பறவைகளாய் இருந்தோம். அந்த மகிழ்ச்சி பறவைகளில் ஒரு பறவையினை நன்பர்கள் தினத்தன்று ஒரு கொடூர சாலை விபத்தில் பறிகொடுத்துவிட்டோம்.

அப்ரஹாம். எங்கள் நண்பனின் பெயர். வகுப்பில் முதல் வரிசை எண் அப்ரஹாம் தான். மிகச் சிறந்த நண்பன்;அனைவரிடமும் பண்பாய்,அன்பாய் பழகக்கூடிய அற்புத மனிதன். அதிர்ந்து கூட பேச அறியா நண்பன். TCS
நிறுவனத்தில் பணியாற்றி இந்த 3 வருடங்களில் மிகச் சிறந்த நிலையினை தன் கடின உழைப்பால் அடைந்த அருமையான உழைப்பாளி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி வெற்றி பெற்றவன். குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்தான். இவனை மட்டுமே நம்பி இருந்த குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பு. தாயின் கண்ணீரும் , தந்தையின் கதறலும் , தங்கையின் துயரமும் நெஞ்சத்தினை விட்டு அகலவில்லை. இத்துனைக்கும் அவன் மிக நிதானமாக வண்டியினை ஓட்டிச் சென்றும், தலைக்கவசம் அணிந்தும் அது என் நண்பனின் உயிரினைக் காக்க பயன்படவில்லை.

இனி நண்பர்கள் தினம் எங்களுக்கு முன் போல் இருக்கபோவதில்லை.

சில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.

தோழனே
தோழைமையுடன் அனைவரிடமும்
பழகிய அற்புத தோழனே
பண்பும் அன்பும் நிறைந்த
இனிய நண்பனே
அதிர்ந்தும் பேசிடா
அருமை நண்பனே
உன் மரணத்தால்
எங்களின் நெஞ்சந்தனை
அதிர வைத்து மீளா
நித்திரையில் ஆழ்ந்ததும்
ஏனோ?
உன் பிரிவு
உண்மை என
அறிந்தும் ஏற்றுக் கொள்ள
மனம் மறுக்கின்றது
உன் மரணம் தந்த
இடியெனும் அதிர்வால்
வார்த்தைகளும்
மறக்கின்றது
நண்பர்கள் தினத்தில்
எங்களை விட்டுப் பிரிந்த
உன் நினைவுகள்
என்றுமே எங்கள் மனங்களில்
நிழலாடும்!!

ஆசை சகியே

உன் இரு விழிகளில் என் உலகினை காண ஆசை சகியே
உன் இதழ் சிரிப்பின் ஆதாரமாய் இருந்திட ஆசை சகியே
உன் வாழ்வுச்சூரியனாய் ஒளி தந்திட ஆசை சகியே
உன் உயிர் சூழற்சியின் தூண்டுகோலாய் இருந்திட ஆசை சகியே
உன் மேல் எனக்கும் தான் கொள்ளை ஆசை சகியே
உன் உயிரினை கொள்ளை அடித்திட ஆசை சகியே
உனை கொள்ள ஆசை சகியே - ஆனால்
உன் மொளனம் உனை கொள்ள துடித்திடும்
எனை கொல்லுதடி சகியே!!

Sunday, August 3, 2008

நினைவு ‘கள்’!!??

கள் குடித்தால் வரும் போதை
நினைவுகள் தருவதாலோ அவை
நினைவு கள்’!!??

கல்

கல்! வாழ்நாள் முழுதும் கல்!!
கல்லவில்லையேல் நீ என்றுமே
கல்!!

அரி

வாழ்க்கையின் வேகத்தில் அரியாய் இரு
மனதினை அரி போல் வைத்திடாதே-பின்
அரியின் இழி நிலை அடைவாய்
அரி போன்று வாழ்ந்திடு
அரியாய் அன்பினைப் பொழிந்திடு
அரி நெஞ்சுரம் கொண்டு -என்றுமே
வாழ்வில் அரி பெற்றிடு !!

அரி என்றால் குதிரை , குரங்கு, பன்றி , மலை , மழை, வலிமை , வெற்றி என்றும் பொருள்கள் உண்டு ... அதனை முறை படுத்தி எழுதியது...

கல்வ

செல்வத்தின் அருமையை உணர்ந்திடு
செல்வத்தின் அறுமையை தெரிந்திடு
கல்வியின் அருமையை உணர்ந்திடு
கற்றலின் அழகினை உணர்ந்திடு
கற்றலே அலப்பு நீக்கி
ஆள் போன்று வாழ்வதை தகர்த்து
ஆல் போல் மனவலிமை தந்திடும் !!

அருமை என்றால் - பெருமை என்றும் பொருள் உண்டு
அறுமை என்றால் நிலையின்மை என்றும் பொருள் உண்டு
ஆள் என்றால் அடிமை என்றும் பொருள் உண்டு
ஆல் என்றால் ஆலமரம் என்றும் பொருள் உண்டு
அலப்பு என்றால் மனக்குழப்பம் என்றும் பொருள் உண்டு

வெற்றியே நீ மட்டும்

மனித ஆற்றலின்
தூண்டுகோலாய்
மனிதன் தோல்வி
கண்டு துவளாமல்
சாதனைகள் படைத்திட
துணைபுரியும் ஊன்றுகோலே!!
உறங்கும் மனிதர்
உடனே விழித்திட
உரமாய் விளங்கிடும்
உந்துசக்தியின் உறைவிடமே!!

உனை அடைந்திடத்தான்
உண்ணாமல் உறங்காமல்
உழைத்து வென்றிடும்
உன்னத உள்ளங்கள் எத்துனை?


கண்டுப்பிடிப்புகளின் தாயும் நீதான்
உனை அடைந்திட அலைந்தே
மனித சமூகம் அறிவுப்பெற்றது
தேடுதல் வேட்டையின்
பரிசும் நீதான்!!

உனை தன்வசம் கொள்ளத்தான்
எத்துனை போராட்டம்?
எத்துனை உயிரழப்பு?
எத்துனை மனக்கசப்பு?
எத்துனை போட்டி?
எத்துனை அழுக்காறு?

பல முறை தோற்பினும்-உன்
ஒரு வெற்றிக்கனி
தோல்வியின் சோகந்தனை
தூள் தூளாக்கிடும்!!

வரலாறுதனை புரட்டிப்பார்த்தால்
உனைப்பெற்று கம்பீர தோரணையால்
வலம் வந்த மனிதர்தான்
எத்துனை எத்துனை?

உன் தங்கையால் மனிதன்
சிதையுண்டு மனம் சிதறும்
நேரம் நீ மட்டும்
இல்லையெனில் எவ்வாறு
தேறிடும் மனிதம்??

நீ தரும் ஊக்கம்தான்
மக்களை விண்வெளி
தாண்டியும் சாதனை
புரிந்திட தயார் செய்கிறது!!

நீ தரும் உற்சாகம்தான்
இருளில் கிடந்த உலகம்
வெளிச்சம் பெற உதவிபுரிந்தது!!

உனை வாழ்நாள் முழுதும்
பெற்றிட கல்லறை காணும்வரை
கண்ணுறக்கம் இழந்தோர் பலர்!!

வெற்றிப்பெற்ற மனிதரும்கூட
மாண்டு போகின்றனர்- ஆனால்
வெற்றியே நீ மட்டும்
என்றுமே தோல்விகாணா
சரித்திரமாய் மனித
முன்னேற்றத்தின் அச்சாணியாய்!!

குறை

குறைதனை குறைத்திடவே

உன் குறைதனை புரிந்திடு

மனித குறைகள் குறையாமல்

நட்சத்திரங்களாய் ஏராளம்

துணைவனின் அன்பில்

துணைவிக்கு குறை

துணைவியின் சமையலில்

துணைவனுக்கு குறை

குழந்தையின் படிப்பினில்

பெற்றோருக்கு குறை

பெற்றோரின் கண்டிப்பில்

குழந்தைக்கு குறை

உழைப்பாளியின் உழைப்பில்

முதலாளிக்கு குறை

முதலாளியின் பேராசையால்

உழைப்போர்க்கு குறை

வயலின் வறட்ச்சிக்கு

தண்ணீர் குறை

சமத்துவ சமாதானத்திற்கு

சாதியே குறை

மக்களின் ஒற்றுமைக்கு

மதமே குறை

மனிதனின் மூடத்தனதிற்கு

சிந்தனையே குறை

அறிவியலின் ஆராய்ச்சிற்கு

ஆன்மீகமே குறை

இயல்பாய் வாழ்ந்திட

நாணமே குறை

உழைத்து வாழ்ந்திட

சோம்பலே குறை

கனிவாய் பேசிட

கோபமே குறை

நிறைவாய் வாழ்ந்திட

குறையே தடை

குறைதனை குறைத்து

குறைப்படுதலை தவிர்த்து

குன்றிய வாழ்வினை

குன்றா வாழ்வாக்கிட

குன்றுபோல் நெஞ்சுரம்

குறையாமல் கொண்டு

குறையின்றிப் உழைப்போமே!!

அவர்களின் கேள்வி??

இவர்களுக்கு கதிரோன்
மறையும் நேரம்தான்
காலை உதயம்!!
புதிராய் உளதா?
இவர்கள் வாழ்வும் புதிர்தான்!!
கதிர் அறியா உதிர்ந்த மலர்கள்
இவர்கள்!!
நல்ல உள்ளங்கள்
கண்டதில்லை அவர்கள்!!
சதைப்பிண்டந்தனை ருசித்திடும்
வெறிநாய்கள்தான் உலவிடும்
அவர்கள் உலகில்!!

கண்களில் மையிட்டிருப்பினும்
சோகம் இழையோடும்!!
உதட்டில் புன்சிரிப்பு இருப்பினும்
அதிலும் ஒரு வெறுமை
என்றுமே தங்கிடும்!!
திக்கறியா காட்டில்
உலவிடும் குழந்தையின்
மனம் போல்
இவ்வுலகில்,
அவர்கள் வாழ்வு!!

விலை கொடுத்து எதையும்
வாங்கிடும் இவ்வுலகில்
அவர்கள் சூழ்நிலையால்
விலை மாதர்கள்!!

யார் அறிவர் அவர்களின்
மனப்போராட்டம்?

பிற பெண்கள் போல்
வாழ்ந்திடத்தான் ஏக்கம்-ஆனால்
ஏக்கம் என்றுமே கனவாய்!!

தாயின் மருத்துவ செலவு
தம்பியின் வேலை
தங்கையின் கல்வி
குழந்தையின் பசி

இவற்றிக்கு மற்றவர்
உடற்பசி தீர்த்தனள்
என்றா கூறிடும் இவ்வுலகம்?

வேசி!!
தாசி!!

பணத்திற்கு உடலை
விற்கும் மானமற்ற பிண்டம்!!
கைகாரி!!
இவளும் பெண்தானா?
மயக்குகிறாள் பார் பார்வையால்
வெட்கம் தெரியா நங்கை!!

இவல் கால் பட்டால்
பட்ட இடம் துலங்கா-என்று
பட்டம் தான் தந்திடும்
பரந்த இவ்வுலகம்!!

இவர்களின் வேதனைச்சிரிப்பை
காமத்தின் தூண்டுகோலாய்
உலகம் பகன்றிடும்!!

போகட்டும்!!
உலகம் அப்படித்தான்!!
என்று எண்ணியே தேறுதல்
அடைந்திடினும்,
இவர்கள் மனதினில்
எப்பொழுதும்
ஒரு வினா உண்டு!!

எங்களை கேலிப்பேசிடும்
உலகமே,
எம்மைப்பற்றி ஒரு செய்தி
கிடைப்பினும்
விளம்பரம் தேடிடும்
கொள்கை அற்ற
செய்தித்தாள்களே!!
எம்மை உலகினர் பார்க்க
சிறுமை படுத்தும்
ஊடகங்களே!!
ஒரு கேள்வி உங்களிடம்!!

சூழ்நிலையால்
உடலை விற்கும்
பெண் வேசி எனின்
தேடி வரும் ஆண்
சுத்த வீரனோ??